தஹராம்பளை விவசாய வீதிகள் வெள்ளத்தால் சேதம் – மறுசீரமைப்புக்கு நடவடிக்கை.!!!
(கே. எ. ஹமீட்)
அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் தஹராம்பளைப் பகுதியில் உள்ள விவசாய வீதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதனால் அப்பகுதி விவசாயிகளின் தினசரி போக்குவரத்து மற்றும் விளைபொருள் கடத்தல் நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அம்பாறை மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் தஹராம்பளை விவசாய வீதிகளை கமத்தொழில் அமைச்சின் விசேட நிதியின் கீழ் புனரமைக்க வேண்டும் என்ற முன்மொழிவை சமர்ப்பித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் சேதமடைந்துள்ள விவசாய வீதிகளை நேரில் பார்வையிடும் நிகழ்வு கடந்த 12 அன்று நடைபெற்றது. இதில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை தலைமையேற்றார்.
மேலும், முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பொத்துவில் பிரதேச சபையின் கௌரவ தவிசாளருமான எஸ்.எம்.எம். முஷாரப், தஹராம்பளை விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் இணைந்து சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்தனர்.
விவசாயிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு உடனடி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், இதற்கான நிதி ஒதுக்கீடு விரைவாக வழங்கப்பட வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது.






