துபாயில் பதுங்கியிருந்த மூன்று குற்றவாளிகள்: கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது.!!!
துபாயில் நீண்ட காலமாக தலைமறைவாக இருந்து வந்த மூன்று முக்கிய குற்றவாளிகள், விசேட பொலிஸ் குழுவினரால் இன்று (16) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில், நிதி மோசடி சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த இரண்டு பிரதான குற்றவாளிகளும், அதேபோன்று நிதி மோசடி விசாரணைகளுக்காக தேடப்பட்டு வந்த ஒரு பெண்ணும் அடங்குவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில், குறித்த மூவரும் இன்று காலை 05.20 மணியளவில் துபாயிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-226 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
விமான நிலையத்தில் இவர்களைப் பொறுப்பேற்ற விசேட பொலிஸ் குழுவினர், மேலதிக விசாரணைகளுக்காக அவர்களை பாதுகாப்புடன் அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச மட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த விசேட நடவடிக்கையின் மூலம், நிதி மோசடியில் ஈடுபட்டவர்களுக்கெதிரான சட்ட நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

