மட்டக்களப்பில் லொறி பல வாகனங்களை மோதி விபத்து; சாரதி தப்பியோட்டம்.!!!
மட்டக்களப்பு புகையிரத பிரதான வீதியில், வீதி சமிஞ்சை விளக்கு வீதிக்கு அருகிலுள்ள பகுதியில் இன்று (24) காலை இடம்பெற்ற பாரிய விபத்து, அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த இடத்தில் பயணித்த லொறி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் சென்ற பல வாகனங்களை ஒன்றன்பின் ஒன்றாக மோதி தள்ளியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் பல வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து இடம்பெற்ற உடனேயே, லொறியை செலுத்திய சாரதி வாகனத்தை நிறுத்தாமல், அங்கிருந்த மற்றொரு வாகனத்தில் ஏறி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் இருந்தவர்கள் கூறுகையில், தப்பியோடிய சாரதி ஏறாவூரைச் சேர்ந்தவர் எனவும், அவர் மது போதையின் கீழ் லொறியை செலுத்தியிருக்கலாம் எனவும் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த உடன் மட்டக்களப்பு பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போக்குவரத்தை சீர்செய்ததுடன், விபத்தில் சேதமடைந்த வாகனங்களை அகற்றும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். மேலும், தப்பியோடிய சாரதியை அடையாளம் காணும் முயற்சிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், தப்பியோடிய சாரதி கைது செய்யப்பட்ட பின்னர் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.



