டித்வா நிவாரண நிதி 10 இலட்சத்தை மீள ஒப்படைத்த: இரு முதியவர்கள்.!!!
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
அண்மையில் ஏற்பட்ட டித்வா புயல் அனர்த்ததினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட தலா 5 இலட்சம் ரூபாய் நட்டஈட்டுத் தொகையை, தங்களை விட அதிகப் பாதிப்புக்குள்ளான மக்களுக்குப் வழங்குமாறு கூறி இரு முதியவர்கள் அரசிடம் மீள ஒப்படைத்துள்ள சம்பவம் மகவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மகவ பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாகடுவாவ பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய எச்.எம்.ஏ. ரன்பண்டா மற்றும் மானிங்கமுவ பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய ஆர்.ஐ.பி. டிங்கிரி அம்மா ஆகியோரே இந்த உன்னதமான செயலைச் செய்தவர்களாவர்.
டித்வா புயல் காரணமாக இவர்களது சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக மதிப்பிடப்பட்ட தலா 5 இலட்சம் ரூபாய் (மொத்தம் 10 இலட்சம்) நட்டஈட்டுத் தொகையைத் தங்களுக்கு வேண்டாம் எனவும், அதனை தாங்களை விடவும் அதிக பாதிப்புக்குள்ளான அனாதரவான மக்களுக்குப் பயன்படுத்துமாறும் கோரி இவர்கள் இருவரும் பிரதேச செயலாளருக்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளனர்.
தங்களது இந்தத் தீர்மானத்திற்கான காரணத்தை விளக்கிய ரன்பண்டா, மற்றும் தமக்கு ஏற்பட்ட சேதத்தை விடவும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மக்கள் சமூகத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டினார். “என்னை விட வசதியற்றவர்கள் பலர் உள்ளனர். இந்த அனர்த்தத்தால் எனக்குப் பாதிப்பு ஏற்பட்டது உண்மைதான், ஆனால் என்னால் இன்னும் மீண்டும் எழுந்து நிற்கும் சக்தி இருக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், “இந்த அனர்த்தத்தால் முழுm வாழ்வாதாரத்தையும் இழந்து, உணவிற்குக் கூட வழியின்றித் தவிக்கும் மக்களை நான் கண்டேன். அரசாங்கத்தின் பணம் என்பது மக்களின் பணம். எனவே, இந்தப் பணம் என்னை விட மிகவும் பாதிக்கப்பட்ட ஒருவருக்குச் சென்றால் நாம் மகிழ்ச்சியடைவோம்” என்று அவர்கள் தெரிவித்துள்ளார்கள்
முன்னதாக வழங்கப்பட்ட 25,000 ரூபாவைக் கொண்டு சேதமடைந்த சில பகுதிகளைத் தாம் ஏற்கனவே சரிசெய்து கொண்டதாகவும் அவர்கள் மேலும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்
