மனித நுகர்வுக்கு தகுதியற்ற; 2,447 டின் மீன்கள் நீதிமன்ற உத்தரவின் கீழ் அழிப்பு.!!!
மனித நுகர்வுக்கு தகுதியற்ற நிலையில் இருந்த 2,447 டின் மீன்கள், அவிசாவளை நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று (16) அழிக்கப்பட்டன.
கொஸ்கம பகுதியில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினரால் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, தரமற்ற டின் மீன்கள் பெருமளவில் கைப்பற்றப்பட்டிருந்தன. இவை தொடர்பான வழக்கு இன்று அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணையின் போது குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட வர்த்தகருக்கு, நீதிமன்றம் ரூ. 20,000 அபராதம் விதித்ததுடன், கைப்பற்றப்பட்ட அனைத்து டின் மீன்களையும் அழிக்குமாறு உத்தரவிட்டது. அதன்படி, நீதிமன்ற அதிகாரிகளின் மேற்பார்வையில் அவிசாவளை நீதிமன்ற வளாகத்தில் வைத்து 2,447 டின் மீன்கள் இன்று முறையாக அழிக்கப்பட்டன.
நுகர்வோரை ஏமாற்றும் நோக்கில் லேபிள்கள் அகற்றப்பட்ட நிலையில் டின் மீன்களை களஞ்சியப்படுத்தியமை, இலங்கை தரக்கட்டளை நிறுவனம் (SLS) வழங்கும் சான்றிதழ் இன்றி விற்பனை செய்தமை, மேலும் முறையான கொள்வனவு ஆவணங்களை வைத்திருக்காமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், தரமற்ற மற்றும் சட்டவிரோதமான உணவுப் பொருட்கள் தொடர்பான சோதனை நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும், இவ்வாறான முறைகேடுகளில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.