வாழைச்சேனை-செம்மண்ணோடை பகுதியில்: போலி வைத்தியர் கைது – 14 நாட்கள் விளக்கமறியல்.!!!
இன்று (22) முற்பகல் மட்டக்களப்பு மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், விஷேட பொலிஸ் குழுவினரால் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செம்மண்ணோடை பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து, தன்னை வைத்தியராக அடையாளப்படுத்திக் கொண்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் பின்னர், அவர் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனைத் தொடர்ந்து, எதிர்வரும் பெப்ரவரி 5ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணைகளில், குறித்த சந்தேக நபர் தன்னை ஒரு வைத்தியராக அடையாளப்படுத்திக் கொண்டதுடன், வைத்தியருக்கான அடையாள அட்டையொன்றையும் தன்னிடம் வைத்திருந்தமை தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சீ.ஐ. ரத்னாயக அவர்களின் ஆலோசனையும் வழிகாட்டலின் கீழ், மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து வாழைச்சேனை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.