மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர் விநியோகம் மட்டுப்படுத்தல் – அவசர அறிவிப்பு.!!!
மட்டக்களப்பு உன்னிச்சை நீர் உள்ளெடுப்பு நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள நீர் இறைக்கும் இயந்திரங்களில் ஒன்று திடீரென செயலிழந்துள்ளதன் காரணமாக, மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இதன் காரணமாக, மட்டக்களப்பு நகரம், இருதயபுரம், கல்லடி, ஏறாவூர், காத்தான்குடி, செங்கலடி, ஆரையம்பதி, கொக்கட்டிச்சோலை, வாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி மற்றும் வவுணதீவு ஆகிய நீர் வழங்கல் திட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், மறு அறிவித்தல் வரை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே நீர் விநியோகம் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, நுகர்வோர் நீர் விநியோகம் செய்யப்படும் நேரங்களில் தமக்குத் தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறும், தேவையற்ற வீண் விரயங்களைத் தவிர்த்து மிகவும் சிக்கனமான முறையில் நீரைப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இந்த அசௌகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.
