அதிகார வேட்டைக்காக முரண்பாடுகளை உருவாக்க விடமாட்டோம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய.!!!
“எமது அரசாங்கம் இனவாதத்திற்கு எதிராகப் பெரும் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இந்த நாட்டின் மக்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் சம உரிமையுடனும் வாழ வேண்டும் என்பதே எங்களின் குறிக்கோள். ஆனால், சில இனவாத முகாம்கள் அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் மீண்டும் முரண்பாடுகளை உருவாக்க முயல்கின்றன” என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
மன்னார் மாவட்டம், அடம்பன் பிரதேசத்தில் நேற்று (15) நடைபெற்ற மகளிர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “சாமானிய மக்களின் ஜனநாயக உரிமைகளோ, சட்டத்தின் ஆட்சியோ அவர்களுக்குத் தேவையில்லை. மாறாக, தங்களது அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்ளும் அரசியல் முயற்சிகளே அவர்கள் மேற்கொள்கின்றனர். இவ்வாறான பிரிவினைவாத அரசியலை மக்கள் தெளிவாக உணர்ந்து நிராகரிக்க வேண்டும்” என்றார்.
நாட்டில் நல்லாட்சியும் சமத்துவமும் நிலைநிறுத்தப்பட வேண்டுமென அரசாங்கம் உறுதியாக செயல்பட்டு வருவதாகவும், இன, மத, மொழி வேறுபாடுகளை தாண்டி ஒற்றுமையுடன் வாழும் சூழலை உருவாக்குவதே தற்போதைய அரசின் பிரதான இலக்காகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பெண்கள் சமூக மாற்றத்தின் முக்கிய சக்தியாக விளங்குகின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டிய பிரதமர், சமூக ஒற்றுமை மற்றும் ஜனநாயக மதிப்புகளை பாதுகாக்க பெண்களின் பங்கு மேலும் வலுப்பெற வேண்டும் எனக் கூறினார்.
இச்சந்திப்பில் உள்ளூர் மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

