வாழைச்சேனையில் காட்டு யானை அட்டகாசம்: பெண் ஒருவர் பலி – நால்வர் காயம்.!!!
இன்று அதிகாலை வாழைச்சேனை பிரதான சந்தை மற்றும் பொது மைதானப் பகுதிக்குள் புகுந்த காட்டு யானை அட்டகாசம் புரிந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.
அதிகாலை நேரத்தில் நகர்ப்பகுதிக்குள் நுழைந்த யானை, அப்பகுதியில் பயணித்த பொதுமக்கள் மீது திடீர் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் போது வீதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் சில சொத்துக்கள் சேதமடைந்துள்ளன.
யானை தாக்குதலில் காயமடைந்த ஐவரில், கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட சகோதர தமிழ் இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் உறவினர் இல்லத்திற்கு வந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த நால்வர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக காணப்படுவதால் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
காயமடைந்தவர்களில் இருவர் பிறைந்துரைச்சேனையைச் சேர்ந்த புஹாரி மற்றும் ரம்ளார் என அடையாளங்காணப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வனவிலங்கு அதிகாரிகளும் பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.