பிறந்த சிசுவை புதைத்த: 36 வயது தாய் கைது – கணவர் மட்டக்களப்பில் தொழில்.!!!
பண்டாரவளை பல்லகெட்டுவ கலப்பிட்டகந்த பகுதியில் சிசு ஒன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 36 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பல்லகெட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (23) மதியம் வீடொன்றுக்கு அருகாமையில் சிசு ஒன்று சடலமாக கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்தனர்.
சிசு கிடந்த இடத்துக்கு அருகிலுள்ள வீட்டில் வசித்து வந்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, குறித்த சிசு கடந்த 17 ஆம் திகதி தனக்கே பிறந்ததாகவும், பிறக்கும்போதே இறந்த நிலையில் இருந்ததால் வீட்டின் முற்றத்தில் சிறிய குழி தோண்டி புதைத்ததாகவும், பின்னர் நாய் ஒன்று சடலத்தை வெளியே இழுத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள பெண்ணின் கணவர் மட்டக்களப்பு பகுதியில் உள்ள வாகனம் கழுவும் நிலையத்தில் தொழில் செய்து வருவதாகவும், பெண் இடைக்கிடையே கூலி வேலை செய்து வந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பல்லகெட்டுவ பொலிஸ் பரிசோதகர் குலரத்ன தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
சிசுவின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் பண்டாரவளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.