45000 மில்லி லீற்றர் கசிப்பு போதைப்பொருளுடன்; பெண் உட்பட 11 பேர் காத்தான்குடி பொலிஸாரால் கைது.!!!
(ஜே.கே)
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல இடங்களில் பொலிசார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 45000 மில்லி லீற்றர் கசிப்பு போதைப்பொருளுடன் ஒரு பெண் உட்பட 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர் .
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரையின்கீழ் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி, தாழங்குடா, புதுக் குடியிருப்பு, நாவற்குடா, கல்லடி, கிரான்குளம் உட்பட பல இடங்களில் இத்திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது கசிப்பு விற்பனை செய்யும் இடங்கள், கசிப்பு உற்பத்தி நிலையங்கள் என்பன பொலிசாரினால் சுற்றிவளைக்கப்பட்டன. மறைத்து வைக்கப்பட்ட நிலையிலும், விற்பனை செய்யப்பட்ட நிலையிலும் ஒரு பெண் உட்பட 11 பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.