மட்டக்களப்பில் “சொந்தமாக இருக்க இடம் – அழகான வாழ்க்கை” திட்டம்.!!!
• 106 பயனாளிகளுக்கு 106 மில்லியன் ரூபா ஒதுக்கீடு – காசோலைகள் வழங்கல்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் “சொந்தமாக இருக்க இடம் – அழகான வாழ்க்கை” எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று (25) நடைபெற்றது.
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான சுனில் ஹன்துனத்தி தலைமையில், பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் தங்கத்துரை சுபாஸ்கரன் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் முதற்கட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 106 பயனாளிகளுக்காக 106 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதில் இன்றைய தினம் 15.9 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட பிரதிநிதிகள், மாவட்ட செயலக உயரதிகாரிகள் மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


















