மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை பகுதியில்; ஆண் ஒருவர் மர்மமாக உயிரிழந்த நிலையில் – சடலமாக மீட்பு.!!!
(ஜே.கே)
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி கடற்கரைப் பகுதியில் செங்கலடியைச் சேர்ந்த வர்த்தக நிலையம் ஒன்றில் கடமையாற்றிவரும் ஆண் ஒருவர் மர்மாக உயிரிழந்த நிலையில் இன்று (11) பகல் 12.00 மணியளவில் மீட்கப்பட்டதுடன், மோட்டார் சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர்.
செங்கலடி கணேச கிராமத்தைச் சேர்ந்தவரும் ஏறாவூர் பகுதியில் தங்க ஆபரண கடையில் ஒன்றில் வேலை செய்துவரும் லக்கி என்றழைக்கப்படும் 34 வயதுடைய புத்திரசிகாமணி லக்ஸ்மன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இது பற்றி தெரியவருவதாவது;
குறித்த நபர் ஏறாவூர் பகுதியிலுள்ள உறவினரது தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் வேலை செய்துவருவதாகவும், சம்பவதினமான நேற்று மாலை வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இரவாகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடிவந்துள்ளனர்.
இந்த நிலையில் சவுக்கடி கடற்கரை பகுதியில் இன்று திங்கட்கிழமை ஆண் ஒருவரின் சடலம் இருப்பதாக பொது மக்கள் பொலிசாருக்கு தெரிவித்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு தடவியல் பிரிவு பொலிசார் அழைக்கப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்ததுடன் உயிரிழந்தவர் செலுத்தி வந்த மோட்டர் சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளனர்.
குறித்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்க நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.