மட்டக்களப்பு நகரில் பெருமளவு ஜஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன்; 23 வயதுடைய இரு போதை வியாபாரிகள் கைது.!!!
(ஜே.கே)
மட்டக்களப்புக்கு கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட, போதைப் பொருளை வியாபாரத்துக்காக எடுத்துச் சென்ற இரு போதைப் பொருள் வியாபாரிகளை இன்று புதன்கிழமை (20) அதிகாலையில் நகர்பகுதியில் வைத்து 3700 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுள் ஒரு இலச்சத்து 20 ஆயிரத்து 640 ரூபா பணத்துடன் கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.எம்.ஜி பிரியந்த பண்டார தெரிவித்தார்.
பொலிஸ் நிலைய பொலிஸ் கொஸ்தாப்பர் ஜெயசிங்கவுக்கு கிடைத்த தகவலையடுத்து சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலீத்த லீலரத்தின வின் ஆலோசனைக்கமைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டாரவின் வழிகாட்டலில் பொலிஸ் கொஸ்தாப்பர் ஜெயசிங்க தலைமையில் சமரபண்டு, ரதன் ஆகிய பொலிஸ் குழுவினர் சம்பவதினமான இன்று அதிகாலை 4.00 மணியளவில் நகர்ப்பகுதி திருகோணமலை வீதியில் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன்போது கொழும்பில் இருந்து பஸ்வண்டி ஒன்றில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் குறித்தபோதை பொருளை கடத்திக் கொண்டு வந்து குறித்த வியாபரிகளிடம் வழங்கிய நிலையில் அதனை வாங்கிக் கொண்டு வரும்போது வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிசார் அவர்களை சுற்றிவளைத்து 23 வயதுடைய ஒருவரிடமிருந்து 3200 மில்லிக்கிராம், 23 வயதுடைய ஒருவரிடம் 4500 மில்லிகிராம் ஜஸ் போதை பொருள்களுடன் கைது செய்ததுடன் ஒரு இலச்சத்து 20 ஆயிரத்து 640 ரூபா பணம், 2 கையடக்க தொலைபேசிகளை மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் பூம்புகார் லயன்ஸ் கிளப் வீதி மற்றும் கருவப்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் எனவும், குறித்த நபர்கள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக அவர் தெரிவித்தார்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.