மட்டக்களப்பில் கிணற்றில் இருந்து; ஓய்வுபெற்ற ஆசிரியரின் சடலம் மீட்பு.!!!
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திசவீரசிங்கம் சதுக்கம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை (23) ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
திசவீரசிங்கம் சதுக்கம், ஆறாம் குறுக்கு வீதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையாக வசித்து வந்த 71 வயதுடைய ஓய்வுபெற்ற ஆசிரியரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தன்று, வீட்டிலிருந்த பணிப்பெண் வெளியில் சென்று மீண்டும் வீடு திரும்பிய போது குறித்த ஆசிரியரை காணாத நிலையில் கிணற்றைச் சோதனை செய்துள்ளார். அப்போது கிணற்றிற்குள் சடலமாக இருப்பதை கண்டறிந்து, இது குறித்து அயலவர்களுக்கு அறிவித்துள்ளார். அதன் பின்னர் சம்பவம் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் கிடைத்ததையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரும், மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நசீர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறு பணிப்புரை விடுத்தார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.