மட்டக்களப்பில் 5 வயது சிறுமி மீது கொடூர சித்திரவதை – சந்தேகநபர் தலைமறைவு.!!!
மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பகுதியில் 5 வயது சிறுமி ஒருவரை தாயின் கள்ளக்காதலன் உடல் முழுவதும் சூடு வைத்து, அடித்து, சித்திரவதை செய்த சம்பவத்தினால் சிறுமி படுகாயமடைந்துள்ளார்.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமான 23 வயதான பெண், தனது கணவரை பிரிந்து 5 வயது மகளுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், அந்த பெண் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடா பகுதியைச் சேர்ந்த திருமணமான ஆண் ஒருவருடன் அறிமுகமாகி, அவருடன் தொடர்பில் இருந்துள்ளார்.
பின்னர், அந்த ஆண், “உனக்குக் கொழும்பில் வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்து தருகிறேன்” என கூறி, பெண்ணையும் சிறுமியையும் கொழும்புக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு தங்கியிருந்த விடுதியில், குறித்த ஆண், சிறுமிக்கு கொடூரமான சித்திரவதை நிகழ்த்தியுள்ளார். சிறுமியின் வாய், கை, கால், முதுகு உள்ளிட்ட உடல் முழுவதும் காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
பின்னர், தாயார் சிறுமியை அழைத்து கொழும்பிலிருந்து மீண்டும் வீட்டிற்கு திரும்பியதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை (19) சிறுமியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
மருத்துவ பரிசோதனையின் போது, “கொழும்பில் ஒருவர் அடித்தார்” என சிறுமி தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
சிறுமியை சூடு வைத்து அடித்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் தற்போது தலைமறைவாகியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.