ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட வியாபாரி; வாயில் விழுங்கி மறைத்த போதைப்பொருள் மீட்பு – ஏறாவூரில் அதிர்ச்சி சம்பவம்.!!!
ஏறாவூரில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட நிலையில் 2040 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட நபர், கைது செய்யப்படும் போது ஹெரோயினை வாயில் விழுங்கியதுடன், சிறைச்சாலைக்குள் கொண்டு செல்லப்பட்ட பின் மலசல கூடத்தில் மலம் கழிக்க வைத்து மீட்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் சனிக்கிழமை (08) இடம்பெற்றுள்ளது.
ஏறாவூரைச் சேர்ந்த 45 வயதுடைய நபர், நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர் என பொலிசார் தெரிவித்தனர். அவர் வெள்ளிக்கிழமை (07) இரவு 2040 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார்.
அவர் சனிக்கிழமை (08) ஏறாவூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதவான் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து, மட்டக்களப்பு சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டார்.
சிறைச்சாலைக்கு சென்ற பிறகு குறித்த நபர், தன்னை கைது செய்யும் போது 28 சிறிய பக்கற்றுக்கள் கொண்ட ஹெரோயினை வாயில் போட்டு விழுங்கியதாக சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து, சிறைச்சாலை அதிகாரிகள் அவரை மலசல கூடத்தில் மலம் கழிக்க வைத்தபோது, 28 பக்கற்றுக்கள் கொண்ட மொத்தம் 1960 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டனர்.
இச்சம்பவத்தையடுத்து, குறித்த நபரை மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, அவரை மேலும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.