மட்டு வைத்தியசாலையில் தொடர் திருட்டு – 23 வயது இளைஞன் மற்றும் கடை உரிமையாளர் கைது.!!!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், தாதியர்கள், வைத்தியர்கள் ஆகியோரிடம் இருந்து கையடக்க தொலைபேசிகள் மற்றும் பணத்தை திருடி வந்த 23 வயது இளைஞன் ஒருவரையும், அவருக்கு உதவியதாக கூறப்படும் கையடக்க தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவரையும் ஏறாவூரில் வைத்து பொலிசார் கைது செய்துள்ளனர். திருடப்பட்ட 18 கையடக்க தொலைபேசிகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன என்று மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளியொருவருக்கு உதவியாக இருந்த பெண்ணின் கைப்பையிலிருந்த கையடக்க தொலைபேசியும் ரூ.10,000 பணமும் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு நாட்களுக்கு முன் முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் பிரதீப் பெர்னார்ந்தே தலைமையிலான குழு விசாரணைகளை ஆரம்பித்தது.
ஏறாவூர் பிரதான வீதியில் உள்ள கையடக்க தொலைபேசி விற்பனை நிலையத்தில் இளைஞன் ஒருவர் 5 மொபைல்களை கொண்டு வந்து, அவற்றின் இரகசிய பூட்டுகளை உடைக்குமாறு கோரியுள்ளார். இது சந்தேகத்திற்குரிய தகவலாக மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்தது.
அதன்பேரில் நேற்று (13) இரவு பொலிசார் கடையை முற்றுகையிட்டு இளைஞனை கைது செய்தனர். ஆரம்ப விசாரணையில் அவர் மட்டு வைத்தியசாலையிலிருந்தே பல தொலைபேசிகளை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து கடை உரிமையாளரும் கைது செய்யப்பட்டார்.
பொலிசார் தெரிவிக்கையில்: கைது செய்யப்பட்ட 23 வயது இளைஞன் ஏறாவூர் மிச் நகரைச் சேர்ந்தவர், அவர் மருத்துவமனையில் வாட்களில் தங்கியிருக்கும் நோயாளிகள் மலசல கூடம் செல்லும் நேரத்தை பயன்படுத்தி தொலைபேசி மற்றும் பணத்தை திருடியுள்ளார்
தாதியர்கள், வைத்தியர்கள் உட்பட பலரின் தொலைபேசிகளையும் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக திருடி வந்துள்ளார், திருடிய மொபைல்களை ஏறாவூரிலுள்ள கடையில் கொடுத்து, பூட்டை உடைத்து விற்பனை செய்து வந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் மட்டு தலைமையக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
விசாரணைகள் தொடர்கின்றன; பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.



