3 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன்; போதை வியாபாரி கைது.!!!
(கற்பிட்டி – எம். எச். எம். சியாஜ்)
புத்தளம் முள்ளிபுரம் பகுதியில் 3 கிலோகிராம் “ஐஸ்” போதைப்பொருளை வைத்திருந்ததாகவும், போதை வியாபாரத்தில் ஈடுபட்டதாகவும் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் புத்தளம் காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை புத்தளம், முள்ளிபுரம் பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர் புத்தளம் முள்ளிபுரத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர். அவரிடமிருந்து “ஐஸ்” போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் ஊதுபத்தி விற்பனை செய்யும் போர்வையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாகவும், அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த “குடு” வகை போதைப்பொருள் தொகையும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் போதைப்பொருளை எவரிடமிருந்து பெற்றார்? யாருக்கு விற்பனை செய்தார்? என்பதைக் கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தடுப்பு உத்தரவின் பேரில் சந்தேக நபர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், புத்தளம் காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.