நாடு தழுவிய அனர்த்தங்களால்: பலி எண்ணிக்கை 153 — 7.7 இலட்சம் பேர் பாதிப்பு.!!!
இலங்கையை தாக்கிய கடுமையான மழை, காற்று, நிலச்சரிவு உள்ளிட்ட வானிலை அனர்த்தங்களால் ஏற்பட்ட பேரழிவு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இன்று (29) மாலை 6.00 மணிக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, பலி எண்ணிக்கை 153 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன், 191 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியான மழையால் ஏற்பட்ட பெருவெள்ளம், நிலச்சரிவு, மண் இடிச்சரிவு மற்றும் பல்வேறு அபாயங்களால், 25 மாவட்டங்களிலும் பரவலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அதன்படி 2,17,263 குடும்பங்களும், மொத்தமாக 7,74,724 நபர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
நாடு முழுவதும் தற்போது 798 பாதுகாப்பான இடம்பெயர்வு மையங்கள் செயல்படுகின்றன. அதில் – 27,494 குடும்பங்களைச் சேர்ந்த 1,00,898 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சில பகுதிகளில் மழை அளவு குறைந்தாலும், பல்வேறு மாவட்டங்களில் இன்னும் வெள்ளமும் நிலச்சரிவு அபாயமும் நீடிக்கின்றன.
இதனையடுத்து, இராணுவம், கடற்படை, வான்படை, பொலிஸார், அனர்த்த முகாமைத்துவப் பணியாளர்கள் பெருமளவில் மீட்பு, வெளியேற்றும் நடவடிக்கை மற்றும் அவசர நிவாரண உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அபாயகரமான பகுதிகளில் குடியிருப்போர் தேவையில்லாத பயணங்களை தவிர்க்க வேண்டும் எனவும், நீரோட்டம் அதிகரிக்கும் ஆறுகள், ஏரிகள் மற்றும் நிலச்சரிவு சாத்தியம் உள்ள மலைப்பகுதிகளில் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.