மட்டக்களப்பில் போலி சட்டத்தரணி கைது – பல இலட்சம் ரூபாய் மோசடி.!!!
மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் சட்டத்தரணிகள் அணியும் ஆடையில் நுழைந்து வழக்காடுவதாக கூறி, பொதுமக்கள் மற்றும் சில சட்டத்தரணிகளிடமிருந்து பல இலட்சம் ரூபாய் மோசடி செய்த போலி சட்டத்தரணி ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை கடந்த சனிக்கிழமை (08) இரவு ஒந்தாச்சி மடத்தில் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர் கடந்த ஒன்றரை வருடங்களாக தன்னை “கொழும்பு உயர் நீதிமன்ற சட்டத்தரணி” என அறிமுகப்படுத்தி, பல நீதிமன்றங்களில் வழக்குகள் இருப்பதாக கூறி பொதுமக்களிடம் நம்பிக்கை பெற்று பணம் பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒரு பெண்ணிடம் இருந்து தங்க ஆபரண வழக்கை மீட்டுத் தருவதாக கூறி ரூ.2 இலட்சம் கோரி, அதில் ரூ.1 இலட்சம் பெற்றுக்கொண்டுள்ளார். பின்னர் நீதிமன்றத்தில் வழக்காடுவதாக கூறி ஆஜராகியபோது, சட்டத்தரணிகள் ஒருவருக்கு சந்தேகம் எழுந்ததால் பதிவாளர் அலுவலகத்தில் அடையாளம் சரிபார்க்க முயன்றபோது, அவர் தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் பொலிசார் மேற்கொண்ட விசாரணையின் போது அவர் ஒந்தாச்சி மடத்தில் உள்ள வீட்டில் மறைந்து இருந்ததை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.
இவரிடமிருந்து சட்டத்தரணி அடையாள அட்டை, இறப்பர் முத்திரை, சட்ட ஆடை, வாகன ஸ்டிக்கர், மற்றும் 16 வழக்குப் பைகள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.