வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து சென்ற இயந்திரப் படகு கடலில் மூழ்கியது; மூன்று மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு.!!!
(எச். எம். எம். பர்ஸான்)
வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 273 MTR இலக்கமுடைய இயந்திரப் படகு ஒன்று, கடந்த வெள்ளிக்கிழமை (10) கடலில் மூழ்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து 4 ஆம் திகதி மூன்று மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக ஆழ் கடலுக்குச் சென்றிருந்தனர். மீன்களைப் பிடித்து வலைகளை படகில் ஏற்றும் வேளையில், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பாரிய அலையில் சிக்குண்டு படகு கவிழ்ந்து கடலில் மூழ்கியுள்ளது.
அதே நேரத்தில், அருகாமையில் மற்றொரு படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் அவசர நடவடிக்கை மேற்கொண்டு, கடலில் தத்தளித்த மூன்று மீனவர்களையும் பாதுகாப்பாக மீட்டு இன்று (12) கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
இந்த கடல் விபத்து, வாழைச்சேனை துறைமுத்திலிருந்து சுமார் 103 கிலோ மீற்றர் தொலைவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில், வாழைச்சேனையைச் சேர்ந்த படகு உரிமையாளர் அல்ஹாஜ் எம். எச். அலீம் அவர்கள் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன், துறைமுக அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.