கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைவிடப்பட்ட சூட்கேஸில் இருந்து – ரூ.113.67 மில்லியன் மதிப்புடைய “குஷ்” போதைப்பொருள்.!!!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 09 மாதங்களாக பெற யாரும் முன்வராத நிலையில் இருந்த கைவிடப்பட்ட சூட்கேஸை சுங்க அதிகாரிகள் நேற்று (17) திறந்து சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது ரூ.113.67 மில்லியன் பெறுமதியான “குஷ்” என்ற உயர்தர கஞ்சா வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தகவலின்படி, மேற்படி சூட்கேஸ் மார்ச் 17 ஆம் திகதி காலை 9.45 மணிக்கு தாய்லாந்தின் பெங்கொக்கிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த ஒரு பயணியால் கைவிடப்பட்டதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
சூட்கேஸை திறந்து பார்த்தபோது அதில் 11 கிலோ 367 கிராம் அளவிலான “குஷ்” போதைப்பொருள் நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய பயணியை அடையாளம் காணவும், போதைப்பொருள் கடத்தல் பின்னணி விசாரணையையும் சுங்கப் பிரிவு மற்றும் பாதுகாப்புப் பிரிவுகள் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

