வாகன இறக்குமதியில் இனி வெளிப்படைத்தன்மை.!!!
■ சுங்கம் – மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் இடையே புதிய டிஜிட்டல் இணைப்பு.
இலங்கையில் வாகன இறக்குமதியின் போது இடம்பெற்று வந்த பாரிய வரி ஏய்ப்பு மற்றும் தரவு மோசடிகளைத் தடுக்கும் நோக்கில், சுங்கத் திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) ஆகியவற்றுக்கிடையே புதிய டிஜிட்டல் இணைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய ஏற்பாட்டின் கீழ், சுங்கத் திணைக்களத்தின் ‘ASYCUDA World’ மென்பொருள் மூலம் வாகனங்களின் இயந்திர இலக்கம், உற்பத்தி ஆண்டு, இயந்திரத் திறன் மற்றும் செலுத்தப்பட்ட வரி விவரங்கள் நேரடியாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு டிஜிட்டல் முறையில் அனுப்பப்படும்.
கோபா குழு மேற்கொண்ட விசாரணைகளில், இதுவரை இரு திணைக்களங்களுக்கும் இடையே முறையான கணினி இணைப்பு இல்லாத காரணத்தால், வாகனத்தின் உற்பத்தி ஆண்டு, இயந்திரத் திறன் மற்றும் உற்பத்தி நாடு போன்ற முக்கிய தரவுகள் மாற்றப்பட்டு மோசடிகள் இடம்பெற்றுள்ளமை வெளிச்சத்திற்கு வந்திருந்தது.
புதிய நேரடித் தரவுப் பரிமாற்ற அமைப்பின் மூலம், வாகனங்களின் இயந்திரத் திறனைக் குறைத்துக் காட்டி வரி ஏய்ப்புச் செய்வது, உற்பத்தி ஆண்டை மாற்றிப் பதிவு செய்வது உள்ளிட்ட மோசடிகள் இனி சாத்தியமில்லையென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், வாகனங்களைப் பதிவு செய்வதற்கு முன்னதாக சுங்கத் திணைக்களத் தரவுகளை நிகழ்நேரத்தில் சரிபார்க்கும் அதிகாரம் மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2025 நவம்பர் 6 அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையின் படி, எதிர்காலத்தில் சுங்கத் திணைக்களம், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், உள்நாட்டு இறைவரி திணைக்களம் மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம் ஆகிய நான்கு முக்கிய அரச நிறுவனங்களும் ஒரே டிஜிட்டல் வலையமைப்பில் இணைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.