குருநகர் படகு விபத்து: இருவர் உயிரிழப்பு – 13 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை; விசாரணைக்கு அமைச்சர் பணிப்பு.!!!
யாழ்ப்பாணம் குருநகர் இறங்குதுறையிலிருந்து இன்று (06) பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்குப் புறப்பட்ட படகு ஒன்று கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் 12 வயது சிறுவன் ஒருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இரு பெண்கள் தொடர்ந்து செயற்கை சுவாச உதவியுடன் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் குருநகர் பகுதியைச் சேர்ந்த 80 வயதான எம். ஜோசப் மற்றும் 57 வயதான பிரான்சிஸ் ஆகியோர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த படகு விபத்துக்கான முழுமையான காரணங்களை கண்டறிவதற்காக அவசர விசாரணை மேற்கொள்ளுமாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதுகுறித்து கடற்படையினருக்கும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், விபத்துக்குள்ளான படகு கடல் பயணத்திற்கு பாதுகாப்பான நிலையில் இருந்ததா, பயணிகளின் எண்ணிக்கை விதிமுறைகளுக்கு உட்பட்டதா, கடல் பயணத்திற்கான பாதுகாப்பு நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டனவா என்பன குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள், காவல்துறை மற்றும் கடற்படை அதிகாரிகளுடன் அமைச்சர் அவசர ஆலோசனையும் மேற்கொண்டுள்ளார்.