வண்டுகளுடன் உணவு தயாரித்த உணவகம் சீல்: உரிமையாளருக்கு ரூ.70,000 அபராதம் – மட்டக்களப்பில் சம்பவம்.!!!
(ஜே.கே)
மட்டக்களப்பு, செங்கலடி பிரதான வீதியில் உணவகம் ஒன்றில் மனித பாவனைக்கு உதவாத மற்றும் வண்டுகள் படிந்திருந்த உணவுப் பொருட்களை பயன்படுத்தி உணவு தயாரிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் அந்த உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ். முரளீஸ்வரனின் வழிகாட்டுதலின் கீழ் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட உணவக பரிசோதனையில் இச்சம்பவம் கண்டறியப்பட்டது.
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தவேந்திரராஜா, அமுதமாலன், மனோகரன் மற்றும் ஹிசாந்தராஜா ஆகியோர் இணைந்து மேற்கொண்ட சோதனையின் போது, கழிவுநீரை திறந்த வெளியில் வெளியேற்றி பொதுச் சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உணவகம் செயல்பட்டதுடன், வண்டுகளுடன் கூடிய கோதுமை மா, வடைப்பருப்பு, மைசூர் பருப்பு, கடலை உள்ளிட்ட உணவு மூலப்பொருட்கள் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொதுச் சுகாதார பரிசோதகர் தவேந்திரராஜா ஏறாவூர் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிவான், உணவக உரிமையாளருக்கு ரூ.70,000 அபராதம் விதித்ததுடன், தேவையான திருத்தப் பணிகள் நிறைவு செய்யப்படும் வரை உணவகத்தை தற்காலிகமாக மூடுவதற்கும் உத்தரவிட்டார்.
மேலும், கைப்பற்றப்பட்ட வண்டுகளுடன் கூடிய பெருமளவான கோதுமை மா, வடைப்பருப்பு, மைசூர் பருப்பு மற்றும் கடலை உள்ளிட்ட மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை அழிக்கவும் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது.
இதன்படி, சுகாதார அதிகாரிகளின் முன்னிலையில் பெருமளவிலான மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டன.






