உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

மனித நேயம்தான்; தேசத்தின் மறைமுகக் கவசம்.!!!

இயற்கை பேரழிவு என்பது அறிவிப்பின்றி வரும் ஒரு விருந்தினர் போலாகும். அது வரும்போது மனிதனின் தொழில்நுட்பங்களும், பொருளாதார வலிமையும், அரசியல் அதிகாரங்களும் ஒரு கணத்தில் சுருங்கிவிடுகிறது. அந்த நேரத்தில் நம்மை காப்பாற்றும் ஒரே சக்தி — மனித நேயம் மட்டுமேயாகும். இந்த வெள்ளப் பேரழிவு அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

வானின் எல்லைகளில் மேகங்கள் அடர்த்தியாக குவிகையில், யாருக்கும் பெரிய அச்சம் உருவாகவில்லை. சில மணி நேரத்தில், ஆறுகள் கரை மீறின. வீதிகள் நீர் கடலாக மாறின. இது வெறும் நீர்மட்ட உயர்வு அல்ல; மக்களின் உயிர் போராட்டமாகும். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ஒரே இரவிலே வாழ்க்கையற்ற இடத்துக்கு தள்ளப்பட்டதை கண்கூடாக அவதானிக்க முடிந்தது.

பேரிடர் தரவுகள் என்பது மனித கண்ணீரின் எண்ணிக்கைகளாகும். இதன்மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்கள்: 6 லட்சத்திற்கும் மேலானது. உயிரிழப்புகளோ: அறுநூறுக்கும் மேலானது, காணாமல் போனோர் எண்ணிக்கையோ நூற்றி ஐம்பதுக்கும் மேலாகும். இவை வெறும் எண்கள் அல்ல; ஒவ்வொன்றும் ஒரு குடும்பத்தின் மறைந்த கனவு ஆகும்.

வெள்ளத்தின் கொடுமைக்கு உள்ளான இலங்கையை, அண்டைய நாடுகள் தங்கள் நம்பிக்கையின் வார்த்தையால் சந்தித்தன. முதலில் உதவிகள் வந்து குவிந்தது அரசியல் நாடகமாக அல்ல; அன்பான நட்பாக. இதைத்தொடர்ந்து அவசர மீட்பு படை, மருத்துவ குழாம், உணவு, மருந்துகள் மற்றும் குடிநீர், தொழில்நுட்ப நிபுணர்கள், மனிதாபிமான விமானங்களென. “இன்று உங்களுக்கு நாங்கள், நாளை எங்களுக்கு நீங்கள்” எனும் மகுடத்தில் நாள்தோறும் உதவிகள் வந்த வண்ணமே உள்ளது.

பேரிடர் நேரத்தில் ஒரு நிமிடம் கூட தாமதமானால், பல உயிர்களை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். இதற்காக
அண்டை நாடுகள் “உடனடியாக செயல்பட்டதன்” மூலம் பல பேரழிவுகளைத் தடுத்தன.

அதுபோலவே, உள்ளூர் மக்கள் அரசு வரும் முன், பேரிடரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்தார்கள்.
அது இந்த நாட்டின் உண்மையான சக்தி.

பள்ளிவாசல்கள் தங்குமிடமாகவும், ஆலயங்கள் சமையல் அறையாகவும், வணிகர்கள் பொருட்களை தானமாகவும், இளைஞர்கள் மீட்புக்குழு வீரர்களாகவும் செயற்படத் தொடங்கினர். அவர்கள் பெற்ற பயிற்சி யாரிடமும் இல்லை. அனைத்து தரப்பினரிடமும் இருந்தது ஒரு மனம் — “உயிரை காப்பாற்ற வேண்டும்” என்பதே ஆகும்.

இந்த பேரழிவில் அதிகம் பேசப்படாத ஒரு சக்தி — தன்னார்வ அமைப்புகள். அவர்களிடம் பணமும் இல்லை, அதிகாரமும் இல்லை. ஆனால் உள்ளத்தால் கட்டப்பட்ட மனித வலையமைப்பு அதிமதிகம் இருந்தது. காலணியின் கீழ் களிமண், கையில் உணவுப் பொதி, மனதில் நம்பிக்கை — இதுவே அவர்களின் படை உடையாக மாறி இருந்தது.

ஒரு அரசு இயங்கும் வேகம், அதன் அமைப்பின் மீது அமைகிறது. முதலில் அரசானது முப்படைகளினூடாக மீட்பு பணிகளை கனகச்சிதமாக செய்தது. அத்தோடு பாதுகாப்பு மையங்களை ஏற்படுத்தியதோடு, மருத்துவ முகாம்களை திறந்து மக்களின் சுகாதார விடயத்தில் கண்ணும் கருத்துமாக செயற்பட்டது. மேலும் உணவு விநியோக செயல் முறையை அமைத்து பட்டினிச் சாவுக்கு முடிச்சுப்போட்டது.

இவைகள் தற்கால நடவடிக்கைகள்.
ஆனால் பேரிடர் தனது பாடத்தைச் சொன்னது — “எதிர்காலம் தயார் இருக்க வேண்டும்” என உணர்த்திவிட்டுப் போனது.

இந்த பேரழிவு ஒரு மாற்றுத்திறன் உரை போல. நாட்டை ஒரு புதிய சிந்தனைக்கு அழைக்கிறது. பேரிடர் என்றால், சாலை மறுகட்டமைப்பு, நீர்வழங்கல் புதுப்பிப்பு, மின்கம்பிகள் பாதுகாப்பு, புதிய நகர் வடிவமைப்பு என புதிய அத்தியாயத்தை விதித்துள்ளது. இவை அனைத்தும் பின்னர் செய்யும் வேலை அல்ல; இப்போது தொடங்க வேண்டிய வேலை.

இந்த பேரழிவு எங்களுக்கு கற்றுக்கொடுத்த சில கடின உண்மைகளாக தரவு மேலாண்மை பலவீனம், அமைப்புகளுக்கிடையேயான இணைப்பு குறைவு, ஊர் மட்டத்தில் பயிற்சி இல்லாமை, ஆபத்து முன்னறிவிப்பு தொழில்நுட்பம் பலவீனம் போன்றவையாகும். இவை சரியானால், பேரிடர் சேதம் பாதியாக குறையும்.

இந்த நாட்டின் எதிர்காலத்தை காப்பாற்ற பாடசாலைகள் முதல் பல்கலைக்கழகம் வரையில் பேரிடர் பயிற்சிகள் வழங்கப்படுவதோடு, தேசிய பேரிடர் வரைபடம் வரையப்பட வேண்டும். அத்தோடு அண்டை நாடுகளுடன் கூட்டமைப்பு மையம் சிறப்பாக பேணப்பட வேண்டிய தேவையுள்ளது. தன்னார்வ அமைப்புகளுக்கு பயிற்சிகளை வழங்கி தயார்நிலையில் வைத்திருக்க வேண்டிய தேவையுள்ளது. மேலும் ஆபத்து தகவலுக்காக ஒரு செயலி உருவாக்கப்பட வேண்டும். அத்தோடு மக்களுக்கும் அரசுக்கும் ஒரு சேர்க்கை திட்டம் தேவைப்படுகின்றது.

பேரழிவு நீரால் வீடுகள் கரைந்தது. ஆனால் அதே நீரால் மனிதனின் பெருமை உயர்ந்தது. எல்லைகளுக்கு அப்பால் வந்த நாட்டின் உதவி, ஊருக்குள் ஓடிய தன்னார்வ இளைஞர்கள்,
நாட்டின் திட்டமிட்ட செயல்பாடு —
இவை மூன்றும் சேர்ந்தால் பேரிடர் ஒரு பாடமாக மாறும்; அழிவாக அல்ல.

நாம் மறக்கக்கூடாத விடயமாகவும், பாடமாகவும்: மண் உடைந்தாலும் மனம் உடையக்கூடாது. மனித நேயம் — நம் நாட்டின் உண்மையான பாதுகாப்பு. ஆக மொத்தத்தில் நாட்டை இன்னும் முன்னோக்கிச் செல்ல அனைவரும் ஒத்துழைத்து நிற்பது தலையாய கடமையும் பொறுப்பும் ஆகும்.

-எம்.ரி.எம்-

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700058

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time