ஏறாவூரில் அனுமதியின்றி போதை லேகியம் விற்பனை – வர்த்தகர் கைது.!!!
மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸார் நேற்றிரவு (21) ஏறாவூர் நான்காம் குறிச்சி பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, வர்த்தக நிலையம் ஒன்றில் அனுமதிப் பத்திரமின்றி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட போதை லேகியங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் பிரசாத் லியனகே தெரிவித்துள்ளார்.
பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றையடுத்து மேற்கொள்ளப்பட்ட இந்த தேடுதல் நடவடிக்கையில், குறித்த வியாபார நிலையம் மூலிகை மருந்துப் பொருட்கள் விற்பனை செய்ய அனுமதியுடன் இயங்கியிருந்தபோதிலும், போதைத் தன்மை கொண்ட லேகியங்கள் விற்பனை செய்வதற்கான அனுமதி இல்லாதது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, அனைத்து லேகியங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட வர்த்தகர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
