காத்தான்குடி பிரதேச செயலகத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு – சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்கள் கெளரவிப்பு.!!!
– எம்.ரி.எம்.யூனுஸ்-
காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு “பெண் தலைமைத்துவம் – செழிப்பான தேசத்திற்கு பெருமை” என்ற தொனிப்பொருளில் இன்று (08) காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜுத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச மட்டத்தில் சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.
மேலும் “அகன்று செல்” தேசிய செயற்றிட்டம் தொடர்பான விழிப்புணர்வை மாவட்ட செயலக போதைப்பொருள் முற்தடுப்பு மாவட்ட இணைப்பாளர் பி. தினேஸ் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து “பெண் தலைமைத்துவம் – செழிப்பான தேசத்திற்கு பெருமை” என்ற தலைப்பில் சட்டத்தரணி குமாரவேல் புருசோத்தமன் சிறப்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வின் போது சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ். சில்மியா, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பாத்திமா பரீட், ஆய்வுக்கும் மேம்பாட்டுக்குமான மகளிர் ஒன்றியத்தின் தலைவி அனீசா பிர்தெளஸ், சமுர்த்தி திட்ட முகாமையாளர் சுஹந்தினி கண்ணன் உட்பட உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.














