வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி; 3 கோடி ரூபாய் மோசடி செய்த நபர் கைது.!!!
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு கொடுக்கும் பேச்சால் 3 கோடி ரூபாய் மோசடி செய்த சந்தேக நபர் ஹட்டன் குற்றவியல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார் என்று ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர், டுபாயில் உணவகம் மற்றும் வீட்டுப் பணிப்பெண் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறி, ஒரு நபரிடம் இருந்து 12 இலட்சம் முதல் 15 இலட்சம் ரூபாய் வரையிலான தொகையை பெற்றார். ஆரம்ப விசாரணைகளில் இதன் மூலம் சுமார் 3 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஹட்டன் பொலிஸ் நிலையத்திலும், ஹட்டன் பொலிஸார் அலுவலகத்திலும் மொத்தம் 49 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இதில் 12 பேர் டுபாய்க்கு அனுப்பப்படுவதாக கூறி கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட நிகழ்வுகளும் உள்ளன என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
மொத்தம் பாதிக்கப்பட்ட 49 பேரும் ஹட்டன் பொலிஸ் வலய பொறுப்பாளர் பிரசாத் வீரசேகரவை சந்தித்து மனு பதிவு செய்தனர்.
ஹட்டன் பொலிஸார், “பதிவு செய்யப்பட்ட அனைத்து முறைப்பாடுகளுக்கும் தீர்வு வழங்கப்படும். இதற்கு எவரும் அச்சப்பட வேண்டியதில்லை. பிரதான சந்தேக நபரை கைது செய்து ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஹட்டன் பொலிஸார் மற்றும் ஹட்டன் குற்றவியல் பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





