வேட்டையாடச் சென்றவர் காட்டு யானை தாக்கி உயிரிழப்பு –வனப்பகுதியில் சோக சம்பவம்.!!!
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
கருவலகஸ்வெவ – பொரலுகந்த வனப்பகுதிக்குள் காட்டு விலங்குகளை வேட்டையாடச் சென்ற ஒருவர், காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துயரச்சம்பவம் இன்று (12) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் கருவலகஸ்வெவ – முரியகுளம் பகுதியைச் சேர்ந்த வாசலா முதியன்செலாகே சாமிலகுமார என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இறந்தவரின் உடலுக்கு அருகில் எண் அழிக்கப்பட்ட வெளிநாட்டு தயாரிப்பு துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அது சட்டவிரோத வேட்டை நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவத்திற்கான மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வெவ பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.