நாட்டில் அதிக வெப்பநிலை குறித்து – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.!!!
சப்ரகமுவ மாகாணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல மாவட்டங்களில் இன்று (6) வெப்பச் சுட்டெண் கணிசமாக உயர வாய்ப்புள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிக வெப்பநிலை காரணமாக ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகளைத் தவிர்க்க, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அதன்படி, போதிய அளவு தண்ணீர் அருந்துதல், வெளிர் நிற ஆடைகள் அணிதல், மேலும் வெப்பம் அதிகமாக இருக்கும் நேரங்களில் கடினமான உடற்பயிற்சிகளைத் தவிர்த்தல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
வெப்பச் சுட்டெண் என்பது காற்றின் வெப்பநிலை மட்டுமல்லாது ஈரப்பதத்தையும் கருத்தில் கொண்டு மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையை குறிப்பதாகும்.
மேலும், முதியவர்கள் மற்றும் உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்களை கண்காணிக்கவும், அதிக வெப்பம் நிலவும் காலங்களில் குழந்தைகளை வாகனங்களுக்குள் தனியாக விட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை பின்பற்றி, தங்களது ஆரோக்கியத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.