திருகோணமலையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்; பொதுமக்கள் செல்ல தடை.!!!
திருகோணமலை மாவட்டம், சம்பூர் – மலைமுந்தல் கடற்பரப்பில், பாரியளவிலான மர்ம உலோகப் பொருள் நேற்று (28) ஞாயிற்றுக்கிழமை கரையொதுங்கியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மர்மப் பொருள், இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) விண்ணிற்கு ஏவிய ரொக்கட்டின் ஒரு பகுதியாக இருக்கலாம் என ஆரம்பக்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில தினங்களாக திருகோணமலையின் ஆழ்கடல் பகுதியில் மிதந்து வந்ததாக கூறப்படும் குறித்த உலோகப் பாகம், கடல் நீரோட்டத்தின் காரணமாக சம்பூர் பகுதியில் கரையொதுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை அவதானித்த மீனவர்கள் உடனடியாக பாதுகாப்புப் பிரிவினருக்கு அறிவித்தனர். கரையொதுங்கியுள்ள பொருளின் முக்கியத்துவத்தை கருத்திற் கொண்டு, சம்பூர் பொலிஸ் பிரிவின் அறிவுறுத்தலின் பேரில், இலங்கை கடற்படை வீரர்கள் அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை, ஆய்வுகள் நிறைவடையும் வரை பொதுமக்கள் அதன் அருகில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக, ரொக்கட்டுகள் விண்ணை நோக்கிப் பாயும் போது, புவி ஈர்ப்பு விசையைத் தாண்டிச் செல்லும் வகையில், அதன் சில பாகங்கள் வெவ்வேறு நிலைகளில் கழன்று விழும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
அந்த அடிப்படையில், இந்தியாவிலிருந்து ஏவப்பட்ட ரொக்கட்டின் ‘ஹீட் ஷீல்ட்’ (Heat Shield) அல்லது எரிபொருள் கலனின் ஒரு பகுதி இவ்வாறு கடலில் மிதந்து வந்து கரையொதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதற்கு முன்னரும், இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்ட ரொக்கட்டுகளின் சிதைவுகள், இலங்கை மற்றும் மாலைத்தீவு கடற்பரப்புகளில் அவ்வப்போது கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பான மேலதிக ஆய்வுகளை பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.


