உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

21 ஆண்டுகளாக கையளிக்கப்படாத நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டம் – காடு மண்டி வீணாகும் ரூ.552 மில்லியன் அரச நிதி.!!!

(பாறுக் ஷிஹான்)

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டம் இன்னும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படாததன் மர்மம் குறித்து பல்வேறு தரப்பினராலும் கேள்வியெழுப்பப்பட்டு வருகின்றது.

கடந்த 2004ம் ஆண்டு சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பெரும் தொகையில் சகல வசதிகளும் கொண்ட கிராமமாக இவ்வீடமைப்புத்திட்டம் சவூதி அரசாங்கத்தின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட போதிலும் நாளையுடன் (26) 21 வருடங்களாக மக்களுக்கு கையளிக்கப்படாம் இன்றும் காடு மண்டிக் காணப்படுகின்றது. சவூதி அரேபியாவின் நன்கொடை நிதியத்தின் 552 மில்லியன் ரூபா நிதியுதவியில் சுனாமி வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இவ்வீட்டுத்திட்டத்துக்கான ஒப்பந்தம் 2006ம் ஆண்டு மே மாதம் 2ம் திகதி கைச்சாத்திடப்பட்டு, வீடுகளை நிர்மாணிக்கும் பொறுப்பு வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சிடம் வழங்கப்பட்டது.

சுமார் 40 ஏக்கர் காணியில் 500 வீடுகள் உட்பட பல்தேவைக்கட்டிடம், சந்தைக்கட்டிடம், ஆண், பெண்கள் பாடசாலை, பள்ளிவாயல், வைத்தியசாலை, பஸ் தரிப்பு நிலையம், விளையாட்டு மைதானம் என்பனவும் அமைக்கப்பட்டுள்ளது.

அப்போது வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக பேரியல் அஷ்ரப் பதவி வகித்தார். சுமார் 40 ஏக்கர் காணியில் அமைந்துள்ள இவ்வீட்டுத்திட்டத்தில் 500 வீடுகளுள்ளன.

இவ்வீட்டுத்திட்டமானது இதுவரை மக்களுக்கு கையளிக்கப்படாததன் காரணம் நீதி மன்றத்தீர்ப்பு மற்றும் அரசியல் காரணங்கள் எனத்தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

இங்கு வீடுகள், சந்தைக்கட்டிடம், பாடசாலை, பள்ளிவாசல் மற்றும் விளையாட்டு மைதானம், பாதைகள் போன்ற அனைத்து வசதிகள் இருந்தும் கடந்த கால ஆட்சியாளர்கள் பாதிக்கப்பட்ட மக்களிடம் இவ்வீடுகளைக்கையளிக்காமல் மரங்களாலும் புற்களாலும் சூழப்பட்ட காடு மண்டி வனமாக தற்போது காட்சியளிக்கின்றது.

தற்போது இம்மீள்குடியேற்றக்கிராமம் காடுகளால் சூழப்பட்டு, கொடிய விச ஜந்துக்கள், யானை மற்றும் ஆபத்தான விலங்குகள், பிராணிகளின் உறைவிடமாக மாறியுள்ளதுடன், வீடுகள் யாவும் சேதமாகியுள்ளது. தற்போது இவ்வீடுகளைப்பகிர்ந்தளித்தாலும் கூட பயனாளிகளால் உடனடியாகக் குடியேற முடியாத நிலையில் மிகவும் மோசமாக சேதமடைந்த நிலையிலேயே வீடுகள் காடுமண்டிய நிலையில் காணப்படுகின்றன.

எனவே, அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நுரைச்சோலையில் கட்டப்பட்ட 500 வீடுகளும் விரைவில் மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல காலமான மக்கள் கோரிக்கையாகும்.

தற்போது கூட நாட்டில் ஏற்பட்ட டிக்வா புயல் அனர்த்தம் காரணமாக பல மக்கள் வீடுகளை இழந்திருக்கின்றார்கள். எனவே, இவ்வாறு இயற்கை அனர்த்தங்களினால் தங்களது வீடுகளை இழந்தவர்களுக்கு ஏதோவொரு வழியில் வீடுகள் அமைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது. இதனை எல்லோரும் இன, மத பேதங்களுக்கப்பால் மனிதாபிமான ரீதியில் நோக்க வேண்டும்.

அரசியல் வேறுபாடுகள் இதர காரணங்களினால் இவ்வாறான பெறுமதியான வீடுகள் உரிய காலத்தில் மக்களிற்கு கையளிக்காததன் காரணமாக பெறுமதி இழந்து வருவதுடன், பல மடங்கு செலவுகளையும் மீண்டும் மக்களுக்கு வழங்கப்படும் போது ஏற்படுகின்றது.

காரணம் தற்போதுள்ள வீட்டுத்திட்டங்களிலுள்ள கதவுகள் போன்ற பெறுமதியான பொருட்களும் களவாடப்பட்டுள்ளன. வீட்டுத்திட்டம் முழுக்க காடு வளர்ந்துள்ளது. வீடுகளில் வெடிப்புக்களும் ஏற்பட்டுள்ளன. இதனால் பாரிய புனரமைப்பு வேலைகளை முன்னெடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதால், அதற்காக பாரியளவான நிதியினை ஒதுக்க வேண்டிய தேவையுள்ளது.

எனவே, சகல தரப்பினரும் இவ்வாறான விடயங்களுக்காக ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப முன்வருவதுடன், மக்களுக்காக ஒருமித்த கருத்துடன் பணியாற்ற வேண்டும்.

பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்ட நுரைச்சோலை வீட்டுத்திட்டம் இதுவரை மக்களிடம் கைளிக்கப்படாமல் காடாகக்காட்சியளிக்கும் நிலைமை குறித்து தற்போதைய அரசாங்க இவ்வீட்டுத்திட்டம் மக்களிடம் கையளிக்க வேண்டுமென்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700030

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time