சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் ஏற்பாட்டில்: கௌரவிப்பு மற்றும் கல்வி உதவிகள்.!!!
– எம்.ரி.எம்.யூனுஸ் –
சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் ஏற்பாட்டில், போரத்தின் உறுப்பினரும் சிரேஷ்ட அறிவிப்பாளருமான கலைச்சுடர் எம்.ஐ.எம். நஸீம் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வும், தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற போரத்தின் உறுப்பினர்களின் பிள்ளைகளை கௌரவிக்கும் நிகழ்வும், குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் இன்று (02) வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடி அல்-ஹிறா மகா வித்தியாலய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் தலைவர் எம்.ஏ.சி.எம். ஜெலீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சிரேஷ்ட ஊடகவியலாளரும், கவிஞரும், முன்னாள் நகரசபை உறுப்பினருமான ரீ.எல். ஜெளபர்கான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும் அதிதிகளாக காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையின் செயலாளரும், கலாச்சார உத்தியோகத்தருமான அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ஜவாஹிர் பலாஹி, ஓய்வுநிலை அதிபர் ஏ.எல்.எம். சித்தீக், சமூக செயற்பாட்டாளர் டி.எல்.எம். குறைஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் ஊடகத் துறையில் நீண்ட கால சேவையாற்றிய கலைச்சுடர் எம்.ஐ.எம். நஸீம் அவர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் போரத்தின் நிர்வாகிகள், நன்கொடையாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வு 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே கல்வி, ஊடகம் மற்றும் சமூக நலன் சார்ந்த சேவைகளை முன்னிறுத்தி நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

















