பாகிஸ்தான் வணிக வளாக தீ விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக உயர்வு.!!!
பாகிஸ்தானின் கராச்சி நகரில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பலியானவர்களில் தீயணைப்பு வீரர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை ஆரம்பமான இந்த தீ விபத்து, நீண்ட நேர போராட்டத்தின் பின்னர் தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மீட்புப் பணிக் குழுவின் தலைமைச் செயல் அதிகாரி அபித் ஜலால் தெரிவித்துள்ளார். தீயை கட்டுப்படுத்தியதையடுத்து, கட்டடத்தின் உள்ளகப் பகுதிகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், குறித்த வணிக வளாகத்தின் உள்ளே இன்னும் சுமார் 70 பேர் வரை சிக்கியிருக்கலாம் என சிந்து மாகாண ஆளுநர் கம்ரான் டெசோரி அச்சம் வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக, உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தீ விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை, தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கராச்சி நகர மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் கட்டடத் தரநிலைகள் குறித்து மீண்டும் கேள்விக்குறி எழுந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.






