கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது – பொலிசார் தீவிர விசாரணை.!!!
கொழும்பில் கைத்துப்பாக்கியுடன் பயணித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் நடைபெற்ற ஆரம்ப விசாரணைகளில், அவர் கைத்துப்பாக்கியை பிறிதொரு நபருக்கு வழங்குவதற்காக எடுத்துச் சென்றதாக தெரிவித்ததாக பொலிஸார் கூறினர். இதனைத் தொடர்ந்து, துப்பாக்கியைப் பெறவிருந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (08) வத்தளை பகுதியில் வீதிப் போக்குவரத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த ஒரு காரை நிறுத்துமாறு உத்தரவிட்டனர்.
ஆனால், காரின் சாரதி பொலிஸாரின் உத்தரவை மீறி, வாகனத்தை நிறுத்தாமல் தொடர்ந்ததால், பொலிஸார் துரத்திச் சென்று காரை வழிமறித்து சோதனை செய்தனர். சோதனையின் போது, சாரதியின் இருக்கையின் கீழிருந்து கைத்துப்பாக்கி மீட்கப்பட்டது.
அதனையடுத்து, காரின் சாரதி கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டபோது, அவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்றும், கைத்துப்பாக்கியை வத்தளையைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்க வந்திருந்தது என்றும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அந்த நபரையும் வத்தளை பகுதியில் வைத்து பொலிஸ் விசேட குழுவினர் கைது செய்துள்ளனர்.
இருவரையும் தற்போது பொலிஸார் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.