புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் புதுப்பிப்பு: நவீன வசதிகளுடன் ஏப்ரல் முதல் இரு வாரங்களில் திறப்பு.!!!
புறக்கோட்டை மத்திய பேருந்து நிறுத்தம் புனரமைப்பு பணிகள் தற்போது வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் தலைமையில் “கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை ஏப்ரல் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரு முனையங்களைக் கொண்ட இந்த மத்திய பேருந்து நிறுத்தத்தின் புனரமைப்பு பணிகள் ரூபா 424 மில்லியன் செலவில் மேற்கொள்ளப்படுகின்றன.
புனரமைப்பின் பின்னர், அடித்தள பகுதி பேருந்து நிறுத்த முற்றமாக பயன்படுத்தப்படுவதுடன், மூன்றாவது தளம் நிர்வாக நடவடிக்கைகளுக்காகவும், இரண்டாம் தளம் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கான லாஞ்ச் மற்றும் சேவை வசதிகளுக்காகவும் ஒதுக்கப்பட உள்ளது.
மேலும், பேருந்துகள், ரயில் மற்றும் விமான சேவைகள் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து ஊடகங்களுக்குமான பொது அறிவிப்புகளை வழங்க புதிய தகவல் மையம் ஒன்றும் வளாகத்தில் நிறுவப்படவுள்ளது.
பொதுமக்களுக்கு மேம்பட்ட வசதிகளை வழங்கும் நோக்கில் இந்த சீரமைப்பு திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.






