பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு: விசாரணைக்கு எடுத்துக் கொள்ள – உயர் நீதிமன்றம் உத்தரவு.!!!
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் எந்தவொரு நியாயமான காரணமுமின்றி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டி, பிள்ளையான் இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு இன்று (09) உயர் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்ட போது, முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்தில் கொண்ட மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாம், மனுவை விசாரணைக்காக எதிர்வரும் 13ஆம் திகதி அழைக்க உத்தரவிட்டுள்ளது.
இந்த மனுவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
மேலும், எந்தவொரு நியாயமான காரணமுமின்றி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பது சட்டத்திற்குப் புறம்பானது என்றும், அதன் மூலம் தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.