கடலில் சறுக்கி விழுந்த விமானம்: விமானியின் துரித செயலால் – 55 பேர் உயிர்தப்பினர்.!!!
சோமாலியாவின் மொகடிஷுவில் உள்ள ஏடன் அட்டே சர்வதேச விமான நிலையம் அருகே அவசரமாக தரையிறக்கப்பட்ட ஸ்டார்ஸ்கி ஏவியேஷன் விமானத்தில் பயணித்த 55 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜிபூட்டிக்குச் சென்று கொண்டிருந்த ஸ்டார்ஸ்கி ஏவியேஷன் நிறுவனத்தின் ஃபோக்கர் 50 (6O-YAS) வகை விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் மொகடிஷு விமான நிலையத்திற்குத் திரும்பியது.
அவசரமாக தரையிறங்கிய போது, விமானம் ஓடுபாதையை விட்டு விலகி அருகிலுள்ள கடல் பகுதிக்குள் சறுக்கி விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், விமானியின் துரிதமான மற்றும் சரியான முடிவுகளின் காரணமாக, விமானத்தில் இருந்த 50 பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள் என மொத்தம் 55 பேரும் எந்தவித காயங்களுமின்றி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.








