மின்சார சபை ஊழியர்களாக நடித்து வீட்டில் புகுந்த இருவர் – 72 வயதான பெண்ணை கட்டி வைத்து தங்க நகைகள் ரூ.6.20 லட்சம் கொள்ளை.!!!
(எம்.யூ.எம். சனூன்)
மாதம்பை பகுதியில் மின்சார சபை ஊழியர்கள் எனக் கூறி வீட்டிற்குள் நுழைந்து, வீட்டில் இருந்த 72 வயதான பெண்ணின் கை, கால்களை கட்டிய நிலையில் வைத்து ரூ.620,000 மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற இருவரைப் பற்றிய விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாதம்பை பொதுவில பகுதியைச் சேர்ந்த ரத்நாயக்க முதியன்சேலாகே சோமாவதி (72) அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த சமயத்தில் அவரது கணவரும் மகளும் வீட்டில் இல்லாத நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு ஆண்கள் தங்களை மின்சார சபை ஊழியர்களாக அறிமுகப்படுத்தி வீட்டிற்குள் நுழைந்ததாகவும், பின்னர் தன்னை கட்டிப்போட்டு தங்க நகைகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றதாகவும் சோமாவதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
கொள்ளையர்களை தாம் அறியவில்லை என்றும் அவர் கூறிய நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை அடையாளம் காண மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.