மட்டு போதனா வைத்தியசாலை சத்திர சிகிச்சை பிரிவு மலசல கூடத்தில்; சிசுவை பிரசவித்து பெட்டியில் மறைத்த – சுகாதார சிற்றூழியர்.!!!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவு மலசல கூடத்தில் சிசுவை பிரசவித்து, பெட்டி ஒன்றில் வைத்து கட்டிலின் கீழ் மறைத்திருந்த 37 வயதுடைய சுகாதார சிற்றூழியர் ஒருவர் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த நிலையில் சிசுவின் சடலும் மீட்கப்பட்டுள்ளது.
திருமணமான இரு பிள்ளைகளின் தாயான குறித்த பெண், திங்கட்கிழமை (22) வழமைபோல் கடமையாற்றிக் கொண்டிருந்தபோது வயிறு வலிப்பதாக கூறி மலசல கூடத்திற்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு யாருக்கும் தெரியாமல் குழந்தையைப் பெற்றெடுத்து, பெட்டியில் வைத்து கட்டிலின் கீழ் மறைத்துவிட்டு மீண்டும் தனது கடமைகளில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் அவருக்கு ஏற்பட்ட இரத்தப்போக்கு காரணமாக தாதியர் ஒருவர் அவரை வார்டில் அனுமதித்தபோது, வைத்தியர்கள் அவர் குழந்தையைப் பெற்றிருப்பதை கண்டறிந்தனர். விசாரணையில், குழந்தையை மறைத்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட பெண் சிசு 38 வார கர்ப்பத்துடன் பிறந்ததாகவும், எடை 2 கிலோ 485 கிராம் எனவும் தெரியவந்துள்ளது.
சிற்றூழியரின் கணவரும் அதே வைத்தியசாலையில் பணியாற்றி வருகிறார். ஆனால் தம்பதியருக்கிடையே ஏற்பட்ட மனக்கசப்பினால், இருவரும் கடந்த ஜூன் மாதம் முதல் பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும், இதற்கிடையில் கர்ப்பம் தரித்திருந்ததை பொலிஸார் விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.
உயிரிழந்த குழந்தையின் மற்றும் கணவனின் இரத்த மாதிரிகளை பெற்று, டி.என்.ஏ. பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட பெண் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.