ஒடிசா ரூர்கேலா அருகே சிறிய விமானம் விபத்து – 6 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்.!!!
இந்தியாவின் ஒடிசா மாநிலம் ரூர்கேலா நகருக்கு அருகிலுள்ள பகுதியில், தனியார் விமான சேவை நிறுவனத்துக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று இன்று (10) அவசரமாக தரையிறங்க முயன்ற போது விபத்துக்குள்ளானது.
புவனேஸ்வரில் இருந்து ரூர்கேலா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ‘இந்தியாஒன் ஏர்’ (IndiaOne Air) நிறுவனத்தின் C-208 ரக சிறிய விமானம், ரூர்கேலாவிற்கு சுமார் 10 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஜல்டா என்ற பகுதியில் தரையிறங்க முயன்ற சமயத்தில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விமானத்தில் 4 பயணிகள் மற்றும் 2 விமான ஊழியர்கள் என மொத்தம் 6 பேர் பயணித்திருந்தனர். விபத்தில் அனைவரும் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து விமானப் போக்குவரத்து அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சம்பவ இடத்திற்கு மீட்பு மற்றும் பாதுகாப்பு குழுக்கள் விரைவாக அனுப்பப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

