விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை: 584 சந்தேக நபர்கள் கைது – 29,165 பேர் சோதனை.!!!
குற்றத்தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பை இலக்காகக் கொண்டு இலங்கை காவற்துறை முன்னெடுத்து வரும் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் நேற்று (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் விரிவான சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நடவடிக்கைகளின் போது ஒரே நாளில் 29,165 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
மேலும், பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் 584 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட 18 பேரும் அடங்குகின்றனர்.
அதேபோல், கைது செய்யப்பட்டவர்களில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 249 பேரும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 130 பேரும் உள்ளடங்குகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வீதி விதிமுறைகள் மீறப்பட்டதற்கான சோதனைகளில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 286 சாரதிகளும், கவனயீனமாக வாகனம் செலுத்திய 57 சாரதிகளும் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறான விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் காவற்துறை தெரிவித்துள்ளது.