இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக; மொழித்துறையின் பதில் தலைவராக – பேராசிரியர் ஏ.எப்.எம். அஷ்ரஃப் நியமனம்.!!!
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடத்திற்குட்பட்ட மொழித்துறையின் (Department of Languages) பதில் தலைவராக பேராசிரியர் ஏ.எப்.எம். அஷ்ரஃப் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பல்கலைக்கழக நிருவாகக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதும், கல்விசார் நடவடிக்கைகளை உயர் நிலைக்கு கொண்டு செல்லும் நோக்கிலும் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பேராசிரியர் ஏ.எப்.எம். அஷ்ரஃப் அவர்கள், அரபு மொழி மற்றும் இஸ்லாமியக் கற்கைகள் துறைகளில் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் பல ஆய்வுகளைச் சமர்ப்பித்துள்ள சிரேஷ்ட ஆய்வாளராக விளங்குவதுடன், கல்வித்துறையில் நீண்டகால அனுபவம் பெற்றவராகவும் அறியப்படுகிறார்.
மேலும், தமிழ், ஆங்கிலம், அரபு உள்ளிட்ட பல்வேறு மொழிக் கற்கை நெறிகளைத் தரமுயர்த்தி, மொழித்துறையை கல்வி மற்றும் ஆராய்ச்சி ரீதியாக புதிய பாதையில் முன்னெடுத்துச் செல்லும் நோக்குடன் அவர் தனது பணிகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் கலை கலாசார பீடாதிபதி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், பேராசிரியர் அஷ்ரஃப் அவர்களின் தலைமையில் மொழித்துறை ஒரு புதிய பரிமாணத்தை எட்டும் என கல்வி வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.
அவரது இந்தப் புதிய பொறுப்பு சிறப்பாக அமைய, மாணவர் சமூகம் மற்றும் கல்விசார் ஊழியர்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.