பாகிஸ்தான் பள்ளிவாசலில் தற்கொலைத் தாக்குதல்: 31 பேர் பலி, 169 பேர் காயம்.!!!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் புறநகர்ப் பகுதியான டார்லை (Tarlai) / ஜி-13 அருகாமை பகுதியில் அமைந்துள்ள ஷியா பிரிவு பள்ளிவாசலில் இன்று (06) வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் போது இடம்பெற்ற பாரிய தற்கொலைத் தாக்குதலில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 169 பேர் காயமடைந்துள்ளனர் என அரச மற்றும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேரில் கண்டவர்களின் வாக்குமூலங்களின்படி, பள்ளிவாசல் வளாகத்திற்குள் நுழைய முயன்ற தற்கொலைதாரியை பாதுகாப்புப் பணியாளர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன் போது துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும், பின்னர் பாதுகாப்பு வளையத்தை மீற முயன்ற தாக்குதலாளர், சுமார் 300க்கும் மேற்பட்டோர் தொழுகையில் ஈடுபட்டிருந்த வேளையில் தனது உடலில் பொருத்தியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தை பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆகியோர் வன்மையாகக் கண்டித்துள்ளனர். “தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவிக் குடிமக்களை இலக்கு வைப்பது மனிதநேயமற்ற செயல்” என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதுடன், காயமடைந்தவர்களுக்கு அவசர மருத்துவ உதவிகள் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார். பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், சம்பவம் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்ளவும், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யவும் பணிப்புரை விடுத்துள்ளார்.
இஸ்லாமாபாத் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்ததாவது, தற்கொலைதாரி பயன்படுத்திய வெடிமருந்துகள் மற்றும் துப்பாக்கிகள் குறித்த தடயவியல் சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகும். இதுவரை எந்தவொரு தீவிரவாத அமைப்பும் உத்தியோகபூர்வமாக உரிமை கோரவில்லை. இருப்பினும், பாகிஸ்தான் தலிபான் (TTP) அல்லது ஐஎஸ்–கே (ISIS-K) போன்ற அமைப்புகள் மீது சந்தேகம் வலுப்பெற்றுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலுக்குப் பின்னர், இஸ்லாமாபாத் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


