போதைப்பொருள் தகவல் வழங்கியவர்களுக்கு வாள் வெட்டு – தேசிய மக்கள் சக்தி இணைப்பாளர் மற்றும் தந்தை காயம்.!!!
பருத்தித்துறை பகுதியில் போதைப்பொருள் விற்பனை தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை பிராந்திய இணைப்பாளரும், அவரது தந்தையும், போதைப்பொருள் கும்பலினரால் வாள் வெட்டு தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளனர்.
தும்பளை பகுதியில் அமைந்திருந்த இவர்களின் வீட்டுக்குள் நுழைந்த வன்முறை கும்பல், வீட்டில் இருந்த மகன் மற்றும் தந்தையார் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த இருவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலின்படி, தும்பளை பகுதியில் சமீபகாலமாக போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை அதிகரித்துள்ளதுடன், அதனைச் சுட்டிக்காட்டும் சி.சி.ரி.வி. காணொளி தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளரால் பெறப்பட்டிருந்தது.
அந்தக் காணொளியை அவர் பொலிஸாரிடம் கையளித்து, தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருந்தார். எனினும், பொலிஸாரால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனையடுத்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமராக்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன், குறித்த இணைப்பாளருக்கு தொலைபேசி மூலம் மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.
அந்த மிரட்டல்கள் தொடர்பில் அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தபோதிலும், எந்தவித கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், சுமார் 20 நாட்களுக்கு பின்னர், நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை, வீட்டுக்குள் நுழைந்த கும்பல், இணைப்பாளர் மற்றும் அவரது தந்தையர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.