புத்தளம் – அனுராதபுரம் வீதியில் தற்காலிக பாலம் சேதம்: போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டது.!!!
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
புத்தளம் – அனுராதபுரம் பிரதான வீதியின் 9ஆம் மைல் கல் பகுதியில் அமைந்துள்ள தற்காலிக பாலம் சேதமடைந்துள்ளதால், அந்த வீதியூடான போக்குவரத்து நடவடிக்கைகள் தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட “டித்வா” சூறாவளி காரணமாக அப்பகுதியில் இருந்த பழைய பாலம் கடுமையாக சேதமடைந்து இடிந்து விழுந்ததால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் பொதுமக்களின் பயண வசதியை கருத்தில் கொண்டு அங்கு தற்காலிக பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போது அந்த தற்காலிக பாலமும் சேதமடைந்துள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான தகவல் புத்தளம் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், விரைவில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

