45 இலட்சம் ரூபாய் மதிப்பிலான திருட்டு: கைவிரல் அடையாளத்தின் மூலம் சந்தேகநபர் கைது.!!!
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி பிரதான வீதி – பதுளை வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் அண்மையில் இடம்பெற்ற பாரிய திருட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வர்த்தக நிலையத்தில் இருந்து சுமார் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் பொருட்கள் களவாடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மற்றும் விசேட பொலிஸ் குழுக்கள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், சம்பவ இடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட கைவிரல் அடையாளங்கள் (Fingerprints) விசாரணைகளுக்கு முக்கிய ஆதாரமாக அமைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், அந்த கைவிரல் அடையாளங்கள் ஏற்கனவே பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபரின் அடையாளங்களுடன் ஒத்துப்போனதாகவும், அதனைத் தொடர்ந்து பொலிஸார் சந்தேகநபரை கைது செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் பெரியநீலாவனை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தற்போது ஏறாவூர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
திருடப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் தற்போதைய நிலை குறித்து தகவல்களை அறிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.