யுவதியின் தங்கச் சங்கிலி பறிக்க முயன்ற திருடன்: பொதுமக்கள் மடக்கிப் பிடித்த சம்பவம்.!!!
புத்தளம் மாவட்டத்தின் வென்னப்புவ பகுதியில் இன்று (09) காலை இடம்பெற்ற தங்க நகை பறிப்பு முயற்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவலின்படி, 18 வயதுடைய யுவதி ஒருவர் ஸ்கூட்டரில் பயணித்துக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் அவரது வாகனத்தை வழிமறித்து தள்ளி கவிழ்த்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து குறித்த நபர், யுவதியின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்து பறித்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.
இந்நிலையில் யுவதியின் அலறல் சத்தத்தை கேட்ட அருகிலிருந்த பொதுமக்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சந்தேக நபரை மடக்கிப் பிடித்து தப்பிச் செல்லாமல் தடுத்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் அருகிலிருந்த சிசிடிவி (CCTV) காமெராவில் பதிவாகியுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், தங்கத்தின் விலை தற்போது சுமார் 4 இலட்சம் ரூபாய் வரை உயர்ந்துள்ள நிலையில் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமெனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் வெளியே செல்லும் போது பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


